தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு வலப்புறம் 
செலும் கல்விஹார பிளேஸில் அமைந்திருக்கும் தாருர் ரஹ்மான் பள்ளிவாயல் 
மற்றும் குர்ஆன் மத்ரசாவின் செயற்பாடுகளை எதிர்த்து அதே பிரதேசத்தில் 
அமைந்திருக்கும் கல்விஹாரவில் இருந்து புறப்பட்ட ஆர்ர்ப்பாட்டம் ஒன்று 
சற்று முன்னர் (பி. ப. 5:30 அளவில்) மிருக்கக்காட்சி சாலை – கல்விஹார 
பிளேஸ் சந்தியில் நிலைகொண்டிருந்தது.
ஜாமியுஸ் ஷபாப் நிறுவனத்தின் காணியில் 
அமைந்திருக்கும் மேற்படி பள்ளிவாயல் மற்றும் குர்ஆன் மதரசா, பள்ளிவாயல் 
மற்றும் குர்ஆன் மதரசா என முறைப்படி பதிவு செய்யப்பட்டிருப்பதுடன், 
பதினைந்து வருடங்களாக  இவ்விடத்தில் இயங்கி வருகின்றன.
கடந்த சில வாரங்களாக குறித்த கட்டடம் 
புனரமைப்பு வேலைகளுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, இந்த பள்ளிவாயலின் 
இயக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முறைப்பாடு ஒன்று கல்விஹார 
பிக்குகளால் தெஹிவளை – கல்கிசை மேயரிடம் முன்வைக்கப்பட்டிருந்தது.
இன்று பி.ப. 2:30 மணியளவில் முச்சக்கர வண்டிகளில் வந்த இனந்தெரியாத கோஷ்டி ஒன்று மதரசா மீது கற்களை வீசிவிட்டுச் சென்றிருந்தது.
பின்னர் பிற்பகல் 4:00 மணியளவில் 
கல்விஹாரவில் இருந்து பிக்குமார் மற்றும் பொதுமக்களைக் கொண்ட ஆர்ப்பாட்டம் 
ஒன்று புறப்பட்டு மத்ரசாவைத் தாண்டி மிருகக்காட்சி வீதி சந்திக்கு வந்து 
சேர்ந்தது. அதில் கலந்து கொண்டோர் மதரசாவை அங்கிருந்து அகற்றுமாறு 
கோசமிட்டதுடன் சுலோகங்களையும் தாங்கியிருந்தனர். அவ்விடத்தில் போலீசார் 
அதிகளவில் வருகை தந்திருந்ததுடன், மதரசா பகுதியில் பாதுகாப்புக் கடமைகளில் 
ஈடுபட்டனர். இவ்வார்ப்பாட்டத்தில் ஐம்பது தொடக்கம் நூறு பேர் வரை 
கலந்துகொண்டனர். மேலும் இதில் கலந்துகொண்ட பொதுமக்கள் இந்தப் பிரதேசத்தை 
சேர்ந்தவர்கள் அல்ல என்றும், வேறு இடங்களில் இருந்து அழைத்து 
வரப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.
குறித்த இடம் மாடுகளை அறுக்கும் மடுவமாக 
பாவிக்கப்படுவதாகவும் அதை மூட வேண்டும் என்பதும் முக்கியமான கோசமாக 
ஆர்ப்பாட்டக்காரர்களால் முன்வைக்கப்பட்டிருந்தது.
பிரச்சினை தீவிரமடைந்ததை அடுத்து 
பள்ளிவாயளுக்கு மேல்மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் தெஹிவளை
 கல்கிஸ்ஸை மாநகர சபையின் ஐ. தே. க. உறுப்பினர் ஜனாபா மரீனா ஆப்தீன் 
ஆகியோர் வருகைதந்திருந்தனர்.
இவ்விடயம் தொடர்பான கூட்டம் ஒன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தெஹிவளை – கல்கிஸ்ஸை மாநகர சபையில் இடம்பெறும் என அறிய முடிகிறது.
படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மேலதிகத் தகவல்கள் கிடைக்குமிடத்து பதிவேற்றப்படும்.










No comments:
Post a Comment